மன்னார் அமுதன் எழுதியவை | ஜூன்3, 2020

கலைஞனின் வீடு … சிறுகதை… மன்னார் அமுதன்

கலைஞனின் வீடு  

  • மன்னார் அமுதன்

தான தந்தன தானனா

தான தந்தன தானனா 

தான தந்தன தான தந்தன

தான தந்தன தானனா… 

எம்மா நாச்சி தூக்கிப் போட்ட காகிதக் கட்டிலிருந்து தூசி விசிறியடித்தது. எல்லாம் செய்தித்தாள்கள். ஒரு பாதி கறையான் அரித்திருந்தது. தூக்கிப்போட்ட கட்டிலிருந்து காகிதப்பூச்சிகள் சிதறி ஓடின.. பழைய கதிரையிலிருந்து தாளம் போட்டுக் கொண்டிருந்த  முடியப்புப் புலவர் விடாமல் தும்மத் தொடங்கினார். தும்மிக் களைத்து மேலும்  இருந்து தும்ம முடியாமல் எழும்பி நின்று தும்மினார். கண்கள் கலங்கி கண்ணீர் நரை மீசையைக் கடந்து ஓடியது. மூக்கைச்சீறி ஜன்னலால் விசிறினார். மீசையில் பாதி ஜன்னல் கம்பியில் பாதியென தொங்கிகொண்டிருந்தது.  மீசையைப் புறங்கையால் துடைத்துக்கொண்டே எம்மாவைப் பார்த்தார். 

எம்மா நாச்சி அதைக் கண்டுவிட்டாள். “ஜன்னலால விசிறாதயுமெண்டா கேட்டால்லா… உம்மைக் கட்டினதுக்கு வீட்டக் கழுவினதும் ஜன்னலைச் துடச்சதும் தான் ஆச்சு. நல்ல சோறுண்டா… கறியுண்டா… என்று அப்படியே ராகமெடுத்து ஒப்பாரியாக்கினாள் ”வயித்துல பெத்ததும் தான் வழியிலயே போயிட்டு….  கழுத்துல கட்டினதுவும் கடனுக்கு போயிட்டு….. ஏ மரியா…. மாதோட்டத் தாயே….. மனசென்டு ஒண்டிருந்தா…. கண்ணு திறப்பாயே….  ”

“அரசாங்கம் கலைஞனுக்கு வீடு கொடுக்குதாம். பரிசு வாங்கின காகிதமெல்லாம் கறையான் திண்டு வளந்திருக்கே….  இதுகள சீராக்கி கொண்டு போய் காட்டினா வீடு தர மாட்டானா…. பொலப்பு இல்லாதவன் பணிஞ்சு போனா குத்தமில்ல புலவரே…. வானம் பார்த்த வீடா இருக்கே…வரப்புக் கட்டுறன் வீட்டுக்குள்ள…   “

முடியப்பு மனசுக்குள்ளயே சிரித்துக் கொண்டார். இந்த உலகத்தில ரொம்ப பிடிச்சது யாருன்னு கேட்டா “எம்மா நாச்சி”ன்னு தான் சொல்லுவார்.  எம்மாக்கு ஐம்பத்தெட்டு. முடியப்பருக்கு அறுவது. காட்டு மரம் போல நல்ல தேகம். கண்ணாடி போடாமலே சின்ன எழுத்துக்களைக் கூட வாசித்து விடுவார். புலவர் எண்டு சொல்லுற அளவுக்கு அவர் பல்கலைக்கழகம் எல்லாம் போய்ப் படிக்கவில்லை. ஆனால் திருவிழாக் கூத்து போடவேண்டுமென்றால் முடியப்பர் இல்லாமல் எதுவும் ஆகாது. ஒரு துறைன்னு இல்ல, கவிதை, சிறுகதை, நாவல், நாட்டார் பாடல்னு எல்லாப் பக்கமும் அவருக்கு ஆகும்.

காலத்துக்கு ஏற்றது போல கூத்துப் பாட்டு எழுதுறதும், எழுதுறதுகளை திருத்துறதுலயும் தாளம் தப்பாது.  முடியப்புக்கு பதினெட்டு வயது இருக்கும் போது தான் எம்மாவைப் பார்த்தார். விவசாய வேலை முடிஞ்சா கூத்துல பாட்டுக்கட்டுறது புலவருக்கு வேலை.  எம்மா பேருக்கேத்தது போல நல்ல வெள்ளக்காறி மாதிரி இருந்தா… கோரஸ்ல ஒரு ஓரமா மிரண்ட மான்குட்டிமாதிரி எம்மா நின்றதைப் பாத்ததுமே புலவருக்கு பிடித்துக் கொண்டது. 

திருவிழாவுக்கு கூத்துப் பார்க்க மாடுகட்டிவந்த எம்மாவுக்கு அந்தப் பத்துநாள் கூத்துலயும், பகலில் நடக்கும் கூத்துப்பாசறையிலும் முடியப்பரைப்  பிடித்துப் போய்விட்டது. திருவிழா முடிஞ்சு எல்லாரும் வண்டியைக் கட்டும் போது  எம்மா  முடியப்புவின் விரல்களைப் பிடித்துக் கொண்டு நின்றுவிட்டாள். 

”யேய்… நாச்சி… எம்மாக்கெளவி… சம்பவம் நடந்து நாப்பது வருசம் ஆயிருக்கும்ல”   சின்னச் சிரிப்போடு  முடியப்பர் சீண்டினார். இப்படி ஏதாவது இடையிடையே கேட்டு சீண்டுவது முடியப்புவிற்கு பிடிக்கும். நாச்சிக்கும் பழசை நினைக்கிறதுல ஒரு விருப்பம் இருக்கத் தான் செய்தது. 

“அதெ எதுக்கு இப்ப நினைக்குறீரு. அறுபதாங் கல்யாண ஆசையா… பெத்த புள்ள இருந்திருந்தா ஒப்பாரிக்கு விட்டிருக்க மாட்டானே.. நீரும் தான் கட்டி அலையுறீரே… சிஷ்யக் கோடிகள…. செய்வானுகளா…. ஆசான்னு வாயுக்குள்ளயாவது சொல்லுவானுகளா… ”

”எவனும் என்னத்துக்கு சொல்லனும்… அரசாங்கம் தான் சேவைக்கு கலாபூஷணம் தந்திருக்கே. நாவலுக்கு சாகித்தியம் தந்திருக்கே” என்று ஓலைவீட்டின் மூலையைப் பார்த்தார். கிடுகுகளுக்கு இடையிடையே நிறைய பதக்கங்கள் சொருகிக் கிடந்தன. கூரையின் வழியாக வானம் விரிந்து கிடந்தது. 

 ”எல்லாம் வெங்கலம். இரும்பா இருந்தாக் கூட அவசரத்துக்கு விக்கலாம். மாலையெல்லாம் மணி கழண்டிருச்செ.. பொன்னாடயப் பாரு… தலைய மூடினா கால் குளிருது. பொறந்தநாள்னு வந்த குட்டிக்கு பாவாட தக்கட்டும்னு நேத்து ரெண்டக் குடுத்துவிட்டன்…”

“குடு… குடு… வச்சி வச்சி பாச்சான் மணமடிக்குது.  இறைச்சாத் தானெ ஊறும்..” கதைத்துக் கொண்டே முடியப்பர் காகிதக் கட்டிலிருந்து கலைத்துறை ஆவணங்களையும், செய்தித் தாள் ஆதாரங்களையும் வரிசைப்படுத்திக் கொண்டிருந்தார். 

”எங்க ஊறிச்சு… சாகித்ய ரெத்னாவை எவனோ கேட்டான்னு எறச்சீரு…. 10 வருசம் ஆச்சு… மறுக்கா ஊறிச்சா… ” எம்மாவின் குரலில் வேதனை கலந்திருந்தது.

தொடர்ச்சியாக கூத்து நடந்த காலங்களில் எம்மா முடியப்பரோடு விரல்களைக் கோர்த்துகொண்டு பாட்டுக் கட்டப் போவாள். முடியப்பரோடு போட்டிக்கு பாடும் அளவில் எம்மா தேர்ச்சி பெற்றிருந்தாள். 

“வான் நிறைந்த முகிலம்மா…. வளம் கொழிக்கும் மழையம்மா… பேதமின்றி அன்பு காட்டும்… கருணையவள் மொழியம்மா…. “ என அறுவடைக்கும் கூத்துத்தொடங்கும் காலங்களிலும் எம்மா மாதாவை நினைத்துக் குரலை உயர்த்தி உள்ளத்தால் உருகிப் பாடினால் தான் வேலைகள் தொடங்கும்….

முடியப்பர் பழசை நினைத்து மனசுக்குள் சிரித்துகொண்டே காகிதங்களை வரிசையாகக் கட்டினார். நேரத்துக்கே வெளிக்கிட்டாத் தான் கந்தோருக்குப் போய் உரியவர்களைச் சந்திக்கலாம் என நினைத்துக்கொண்டார்.

கோப்பியை ஊத்திக் குடித்தார். எம்மாவுக்கும் ஒரு குவளைக் கோப்பி வைத்தார். எம்மாவுக்கு கோப்பி குடிக்கப் பிடிக்கும். ஆனால் ஊத்தப் பிடிக்காது. முதலிலிருந்தே அப்படி ஆகிவிட்டது.

பலபல நினைப்புகளோடு பஸ் ஏறியவருக்கு இறங்க வேண்டிய இடம் வந்தது கூட தெரியவில்லை. இடையில் கொஞ்சம் நித்திரை வேற…. கண்ணைக் கசக்கிக் கொண்டே  தடுமாறி இறங்கி கந்தோரை நோக்கி நடந்தார்.

கந்தோரில் இவருக்கு முன்னமே நிறைய ஆட்கள் நின்றார்கள். அவருடைய வயதில் யாரும் இல்லை. கொஞ்சம் வெட்கமாகவும் கிடந்தது. எல்லாம் இளம் ஆட்கள். 

முன்னாள் நின்ற இளைஞனிடம் “ தம்பி இங்க கலைஞர்களுக்கு வீட்டுத் திட்டம் குடுக்கிறது உண்மையா” என்று கேட்டார்.

அவன் தன் வீட்டிலேயே பாதியைக் கேட்டது போல முகத்தைச் சுழித்தான். “கலைஞர்களுக்கு குடுக்கப் போறாங்க எண்டு தான் கதை… அதான் வந்திருக்கிறன்… நீங்க எந்தத் துறையில கலைஞர்” 

”ஒரு துறையெண்டு இல்லையப்பன்…. கொஞ்சம் ஆவணங்கள் கொண்டு வந்தன் … காட்டிப் பாப்பமெண்டு…”

கதைத்துக்கொண்டு நிற்கும் போதே முன்னாள் இருந்து அழைப்பு வந்தது… “அந்த வயசான ஐயாவைக் கொஞ்சம் விடுங்கோ…. வயோதிபருக்கு வரிசையில முன்னுரிமை குடுக்கனும்” என்று வீட்டுத் திட்ட அலுவலர் சத்தம் போட முன்னாள் விட்டார்கள்.

ஐயாட பேர் என்ன…  எந்த இடம்? 

சொன்னார்..

ஐயா… ஆவணம் எல்லாம் எடுங்கோ….

காட்டினார்.

ஐயா… அரசாங்க சுற்று நிருபம் வாசிச்சீங்களா…? அது என்ன சொல்லுதெண்டா வறுமையில வாடுற கலைஞரா இருக்கனும். 60 வயசுக்கு உள்ள இருக்கனும்…. 20 வருசத்துக்கு மேல கலைத்துறை அனுபவம் இருக்கனும். உங்கட பேருல ஒரு காணியோ  வீடோ இருக்கக் கூடாது…

அது சரி தம்பி… 60 வயசு வரைக்கும் இருக்க ஒரு காணியில்லாமயா இருப்போம். வயல்லையும் வெய்யில்லயும் காஞ்சு 10 பேச் காணி வேண்டி வச்சிருக்கிறன். வீடு கட்டுற அளவுல தான் வசதி அமையல. மத்தபடி மூணு வேள நாச்சியும் நானும் வயித்த நிறப்புற அளவுல வசதியாத் தான் இருக்கிறோம். 

ஐயாட கதையில ஞாயம் இருக்கு. அது எனக்கு தெரியும்… அரசாங்கத்துக்கும் தெரியனும் தானே. இந்த ஆவணங்களும் ஒண்டும் ஒழுங்கா இல்ல. இந்தப் படத்துல நிக்கிறது நீங்களா எண்டே தெரியல… இன்னொரு முறை பாப்போம்… நீங்க வெயிலேற முதல் வீட்ட போயிருங்க… 

முடியப்பருக்கு கண்கள் கனத்தன… வீடில்லை என்பது ஒரு விசயமில்லை. இதைப்போல் எத்தனை எத்தனை புறக்கணிப்புகள் முடியப்பருக்கு. எம்மா கிளவிக்கு என்ன பதில் சொல்வது என்பது தான் பெரிய பிரச்சினையாக இருந்தது. உடனே வீட்டிற்கு செல்வது பற்றிய சாத்தியத்தை யோசித்துக்கொண்டார். அது ஏலாது. இருட்டவிட்டு கடைசி பஸ் எடுத்தால் போய் படுத்துவிடலாம் என்று யோசித்துக்கொண்டே மரநிழலில் சாய்ந்தார்.

நேரம் செல்லச் செல்ல கூட்டம் அதிகரித்தது. அவ்வளவு பேரும் கலைஞர்கள் என தெரிந்தபோது முடியப்பருக்கு பரவசமாக இருந்தது. கூத்துப் பழக்க ஆள் தேவையெண்டு கூப்பிட்டால் கூட முன்பு போல இப்போது ஆக்கள் வருவதில்லை என்று கவலைப்பட்டிருக்கிறார்.  மத்தியானத்திற்கு மேல் இன்னும் பலர் வந்தார்கள். அவர்கள் கந்தோர்களில் லீவு போட்டுவிட்டு வந்தவர்கள். பலருக்கு முடியப்பரைத் தெரிந்திருந்தது. ஒராள் சாப்பிடப் போவோம் எனக்கூட்டிப்போனார். ஒராள் கைகழுவத் தண்ணீர் கொடுத்தார். 

இப்போது முடியப்பரைச் சுற்றி ஆறு ஏழு கலைஞர்கள் இருந்து கதைத்தார்கள். அவருடைய நாடகங்களில் சிப்பந்தியாக நின்று சாமரம் வீசியவனும் ராசா வேசம் கட்டினவனும் கூட வீட்டுத்திட்டத்திற்காக வந்திருந்தார்கள். கூடிக்கதைக்க நல்ல வாய்ப்பாக இருந்தது போல பலதையும் சிரித்து சிரித்துக் கதைத்தார்கள். 

கலைஞர் வீட்டுத்திட்ட பரிதாபங்களைப் பற்றிய பகடிகளாக நிறையச் சொன்னார்கள். 

மேளம் அடிக்கும் குட்டியான் சொன்னான்… அப்பு… அண்டக்கி கூட்டம் எண்டு வந்து பாத்தன். வழமைக்கு மாறா ஏகப்பட்ட கூட்டம். கூட்டம் முடியறப்போ தான் எங்களுக்கே வீட்டுத்திட்டம் பத்தித் தெரியும். முடிஞ்சு வெளியில் வரும் போது அவசரமா வந்த பொடியன் கேட்டான்…. “கலைஞர் கூட்டம் முடிஞ்சுதா ஜி”

ஓம்

நானும் கலைஞன் தான் ஜி… வர கொஞ்சம் லேட்டாயிட்டு..

எந்த அமைப்பு ஜி நீங்க…?

அமைப்பா பதிவு செய்யத்தான் யோசிச்சிட்டு இருக்கிறன்… இப்ப நான் தனியா தான் பண்ணிட்டிருக்கன் ஜி…”

என்ன பண்ணிட்டிருக்கிங்க…?

”4,5 டிக்டொக் வீடியோ போட்டிருக்கன் ஜி… வீட்டுத்திட்டம் கிடைக்குமோ தெரியலைஜி…”

கட்டாயம் கிடைக்கும் ஜி… முயற்சியை மட்டும் கைவிட்றாதிங்க..கலைஞர்ஜி… அமைப்பை பதிவு செய்யும் போது தலைவர் செயலாளர் தேவைப்பட்டா சொல்லுங்க… கைவசம் ஒரு குழு இருக்கு … வாழ்த்துக்கள் ஜி…. “ அப்படின்னு சொல்லி அனுப்பிட்டேன்ன்னு குட்டியான் சொல்லி முடிக்க முடியப்பரும் வாய்விட்டுச் சிரித்தார்.

குட்டியானின் முறை வர அவன் வீட்டுத்திட்ட அலுவலைரைப் பார்க்க போனான். முடியப்பர் தேத்தண்ணி ஒன்றை குடித்துக்கொண்டே கதைத்துக்கொண்டிருந்தார். 

திரும்பிவந்த குட்டியானின் முகம் தொங்கிக் கிடந்தது. “அப்பு… ஆவணம் ஒண்டும் காணாதாம்… ஏதாவது ரெண்டு மூணு படம் இருந்தா கிடைக்கலாமாம்” என்றான்…

முடியப்பர் கையிலிருந்த காகிதக் கட்டை அவனிடம் போட்டார். ”இதுல உண்ட படம் ரெண்டு மூணு பாத்தன்… சவுரிக்கும், ராசாக்கும் தேவையானது கிடந்தாலும் எடுத்துக்குடு…. எறக்கிறது தானேடா ஊறும்… நான் மெல்ல போறன்… வீடுகட்டி முடிய வாங்கடாப்பு. ஏதாவது நாடகம் போடுவம்” என்றபடி முடியப்பர் எழும்பி நடந்தார்.  நாச்சியாவின் பாடல்கள் காதுக்குள் அலையடித்தன.

  ——–முற்றும்–
நன்றி : சிறுகதை மஞ்சரி , நோர்வே தமிழ்ச்சங்கம்

மன்னார் அமுதன் எழுதியவை | பிப்ரவரி19, 2020

எஸ்தர் சிறுகதை மன்னார் அமுதன்

எஸ்தர்

                              =====மன்னார் அமுதன்

காற்றைக் கிழித்துக்கொண்டு அரிவாள் கீழிறங்கியது. கழுத்தில் பீறிட்ட இரத்தம் கையில் பிசுபிசுக்கையில் தான் தெரிந்தது “காதலின் விலை என்னவென்று..? விலுக்கென ஒரு துள்ளலுடன் எழுந்து சரிவில் பாய்ந்து ஓடத் தொடங்கினான் கேசவன். பாவம் எஸ்தர் எந்தப்பக்கம் ஓடிக்கொண்டிருக்கிறாளோ…  சூரிய உதயத்திற்கு முன்னெழுந்து ஓடத் தொடங்கும் ஒரு மானின் வேகத்தோடு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு கேசவன் ஓடிக்கொண்டிருந்தான். மலையில் ஏறும் போதிருந்த கஸ்டம் இறங்கும் போது இல்லை. ஒரு துள்ளலில் மலையை விட்டு இறங்கியது போலிருந்தது. இரையைக் கண்டு கொண்ட சிங்கத்தைப் போல எஸ்தரின் அப்பா டேவிட் இரத்தம் சொட்டும் அரிவாளோடு மீசை துடிக்க நின்று பார்த்துக் கொண்டிருந்தான்.

 “நாளைக்கு மொட்டைப் பாறைக்கு வா… பேசனும்…” என எஸ்தர்  சொன்னபோது கேசவனால் நம்பமுடியவில்லை. எத்தனை நாள், எத்தனைமுறை கெஞ்சியிருப்பான். இடைஞ்சல் இல்லாத ஒரு இடத்தில், யாரும் வந்துவிடுவார்களோ எனும் பயமில்லாமல், இயற்கையை இரசித்தபடி எஸ்தருக்கு ஒரு முத்தம் கொடுக்க வேண்டும் என்பது அவனது இலட்சியங்களுள் ஒன்று.  முத்தம் கேட்டால் நெற்றியில் மட்டும் தான் தருவாள். பிறந்தநாள் என்றால் கன்னம் வரை அனுமதிப்பாள். அவளே வரச்சொல்லும் போது அவனுக்கு ஜிவ்வென்றிருந்தது. ஆனால் எஸ்தரின் அப்பாவிற்கு தெரியவந்தால் என்னவாகும் என நினைக்கும் போதே கேசவனுக்கு நடுங்கியது. கண்களைச் சுருக்கி செவ்விதழ் சுழித்து கறாராக  “வாருவாயா… மாட்டாயா” என எஸ்தர் முறைத்தாள்.

கைகள் கன்னத்தைத் தடவினாலும்  “வருவேனென” தலை அனிச்சையாக ஆடியது. விரல்களின் அடையாளம் கன்னத்தில் இன்னும் மாறாமல் இருந்தன.

கால்முட்டப் போட்டிருந்த பட்டுப் பாவாடையை கணுக்கால்கள் தெரிய உயர்த்தியபடி எஸ்தர் கொலுசுகள் குலுங்க மாடிப்படியில் ஏறினாள். அவள் கண்கள் கலங்கியிருந்தன. தூரத்தில் எஸ்தரின் அப்பா வருவது தெரிந்தது. கேசவன்  சைக்கிளை எதிர்த்திசையில் வேகமாக மிதிக்கத் தொடங்கினான்.

0000

கேசவனின் குடும்பம் இராமேஸ்வரத்தில் கரையொதுங்கியபோது அவனுக்கு ஆறுவயதாயிருந்தது. அவன் பேசும் தமிழ் தான் இலங்கையின் தமிழென உலகமே நம்பிக்கொண்டிருக்கும் ஊரில் பிறந்தவன். வயல்காணிகளும் , வளவோடு கூடிய வீடும், எடுப்புக்கு எட்டு வேலையாட்களும் என வாழ்ந்தவன். இனப்பிரச்சினை தலை தூக்கிய காலத்தில் கேசவனின் தாயின் பிரச்சினை தாங்க முடியாமல்  கடல்மார்க்கமாக வள்ளமேறியிருந்தார் கேசவனின் அப்பா பரமேசுப்பிள்ளை. இயக்கச் செயற்பாடுகளில் முன்னிற்பதும், தோழமையும் அவருக்கான வழியை சற்று இலகுவாகத் திறந்துவிட்டது. இந்தியாவிலிருந்து குடும்பத்தோடு பிரான்ஸ் செல்வது தான் நோக்கம். அப்பெருங்கனவு  கனவாகிப் போனதோடு அவர்களை நிரந்தர அகதிகளாக்கியிருந்தது. கேசவனை மட்டுமாவது அனுப்பிவிடலாம் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது. அவரிட கதைக்கு யாரும் திருப்பி பதில் சொல்றது அவருக்கு பிடிக்காது. தலையில் அடித்து “மண்டேல போட்டுருவன்.. போடா” என அதட்டி அனுப்புவார்.

பள்ளிக்கால நட்பு காதலாகிக் கசிந்துருகிய போது கேசவன் கல்லூரியில் சேர்ந்திருந்தான். கல்லூரி முடித்து வேலையொன்றில் சேர்ந்துகொண்டால் எஸ்தரை கைபிடித்துவிடலாம் என நினைத்தான். அதன் பின்வந்த காலங்களில் தான் எஸ்தரைச் சந்திப்பதில் அவனுக்கு பிரச்சினைகள் தோன்றின. அவனைச் சந்திப்பதற்காகவே ஊருக்கு ஒதுக்குப்புறமான அடிகுழாயில் எஸ்தர் நல்ல தண்ணீர் பிடிக்க வருவாள். அந்நேரத்தில் வேறுயாரும் குழாயடிக்கு வந்துவிட்டால் அந்த சந்திப்பும் தடைபட்டுவிடும்.

கயிறால் பிணைக்கப்பட்ட இரண்டு குடங்களை சைக்கிள் கரியரில் தொங்க விட்டுக்கொண்டு எஸ்தர் வருவாள். கேசவன் அவள் வரும்வரை தன் குடத்தோடு காத்து நிற்பான். அவளுக்கும் சேர்த்து தானே தண்ணீர் அடித்துக் கொடுப்பான். அடிகுழாயில் அடிப்பதற்காக அவன் நுனிக்கால்களை உண்ணி மெலிந்த தேகத்தை காற்றில் பறக்கவிட்டு மீண்டும் கீழிறங்குவதைப் பார்க்கும் போது எஸ்தருக்கு சிரிப்பாகவும் பாவமாகவும் இருக்கும்.

காதலர்கள் என கண்டுபிடிக்கப்படாத வரை நூலகப் புத்தகங்களை கொடுக்கவும் வாங்கவுமென எஸ்தரின் வீட்டுக்கே கேசவன் போய்வருவான். அவனுக்கு வாசிப்பிலெல்லாம் சொல்லிக்கொள்ளும்படி ஆர்வமில்லை. முழுதாக ஒரு புத்தகமும் அவன் வாசித்ததில்லை. ஆனால் அவளைச் சந்திப்பதற்கு அதுதான் இலகுவான வழி. ஆயிரம் பிரச்சினைகளுக்கு மத்தியிலும் காதல் களவிற்கான வழியை மட்டும் காட்டிக்கொண்டேயிருந்தது. வயதும் இளமைத் திணவும் சந்திப்புகளைச் சாத்தியமாக்கின.

ரம்மியமான நட்சத்திரங்களுக்கும் இருளுக்கும் மத்தியிலான குழாயடிச்சந்திப்பு நாளொன்றில் தான் இரவுப்பூச்சிகளின் ஒலியைக் குலைத்தவாறு டேவிட் எங்கிருந்தோ வந்தான். எதுவுமே கேட்டுக்கொள்ளவில்லை. காதோடு விழுந்த அறையிலிருந்து கேசவன் சுதாரித்து எழும்போது எஸ்தரை தூரத்தில் இழுத்துக்கொண்டு செல்வது தெரிந்தது. இரவுப்பூச்சிகள் தலையைச் சுற்றிக்கொண்டு காதுகளுக்குள் சத்தமிடுவது போலிருந்தது. சம்பவத்தை கோர்வைப்படுத்த முயன்றான்.

 “அகதிநாய்க்கு அந்தஸ்து கேக்குதா…. ” என்ற டேவிட்டின் இறுதிவார்த்தைகள் மூளைக்குள் உறைந்து கிடந்தன.

“மகன் … இங்க யாரும் எவிடம் எண்டு கேட்டா தயங்காம சொல்லு… அதுக்குப் பிறகு சேட்டை விட மாட்டான்கள்” என சகபாடிகளோடு சண்டை பிடித்து வந்த நாளில் அப்பா சொன்னதை கேசவன் நினைத்துக்கொண்டான். அப்பா அடிக்கடி சொல்லும் மண்டையில் போடுவதைப் பற்றியும் யோசித்தான். இறுதியில் எஸ்தரைக் கல்யாணம் முடித்தே தீருவதென சபதம் எடுத்துக் கொண்டான். இருள், அதற்கு சாட்சி என்பதாய் நிறைந்து கிடந்தது.

000

ஆளரவமற்ற அந்த மலையின் ஒரு சரிவிலிருந்தது மொட்டைப்பாறை.  அதைச் சுற்றி ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்தன. மரங்கள் ஏதுமின்றி காலை வெயிலிற்கே மலை கருகிக்கொண்டிருந்தது. மொட்டைப்பாறை எந்நேரமும் கீழே விழுந்துவிட தயாராக இருப்பதைப் போல் நாற்பத்தைந்து பாகை சாய்வில்  நின்றது. அதற்கு எந்த பிடிமானமும் இருக்கவில்லை. பாறையைச் சுற்றியிருந்த  செம்மஞ்சள் துணி காற்றின் படபடப்பில் கிழிந்திருந்தது. விளக்கேற்றும் இடங்கள் எண்ணெய் ஊறி கறுப்புத்திட்டாய் இருந்தது. பாறையில் இரு கண்கள் கீறப்பட்டு பெரிய சிவப்புப் பொட்டிட்டிருந்தார்கள். நீதிதவறும் காலத்தில் அது தானாகவே விழுந்து அநீதியாளர்களைத் தண்டிக்கும் என பேசிக்கொண்டார்கள். மேய்சல் ஆடுகள் எந்தப் பயமுமின்றி அதன் மேலேறுவதும் சறுக்குவதுமாய் விளையாடிக்கொண்டிருந்தன.

வரையாட்டின் மதர்ப்போடு தனங்கள் குலுங்க எஸ்தர் மலையில் ஏறிக்கொண்டிருந்தாள். களைப்பு அவளின் நடையில் தெரிந்தது. முக்காடைத் தாண்டி வெயில் முகத்தில் அறைந்தது. கைரேகைகள் எதுவும் தெரிகிறதா என கேசவன் உற்றுப்பார்த்தான்.  எஸ்தரின் இடதுகண் புருவம் வெடித்து கண் சிவப்பாகியிருந்தது.

பழிதீர்க்க முடியாத பெருங்கோவம் கேசவனின் இடுங்கிய கண்களில் கண்ணீராக வழியத்தொடங்கியது. அவனது மெலிந்த தேகம் குலுங்கிக் குலுங்கி அடங்கியது. கைகள் நடுங்க எஸ்தரை அணைத்தபடி “கவலப்படாத… உன்னைய கல்யாணம் பண்ணி பிரான்ஸ்சுக்கு கூட்டிட்டுப்போயிடுறன்” என்றான்.

அழாதடே கேசவா… நானே அழேல்ல… ஆம்பளை நீயேன் அழுற… அப்பா அடிச்சது உனக்கு வலிக்கா” என சிரிக்க முயன்றாள் எஸ்தர். அழுகை அவளின் மனதை இளக்கியிருந்தது.  அவளே கதியென அழும் ஆணின் கண்ணீர் எந்தப் பெண்ணின் உறுதியையும் ஒருமுறை ஆட்டிப்பார்க்கிறது. தலையைக் கோதி மடியில் சாய்த்துக்கொண்டாள்.

மொட்டைப்பாறையின் சிறுநிழல் இருவரையும் அணைத்துக்கொண்டது. அணலும் தகித்தது. தகிப்பு உள்ளிருந்தா வெளியிருந்தா என அறியமாட்டாமல் இருவரின் மூச்சிலும் சூடேறியிருந்தது. மலைச்சரிவில் வெயிலை இரசித்தபடி கிடா ஒன்று மருக்கையை மணம் பிடித்துக்கொண்டு நின்றது.

000

கேசவன் பாறைகளுக்குப் பின்னால் ஒளிந்திருந்தான். பின்னால் எவரும் வரவில்லை என்பதை உறுதிபடுத்திக்கொண்டான். உயிர்ப்பயம் பசியை மறக்கடித்திருந்தது. உதடுகள் காய்ந்து முகம் சொரசொரத்தது. கால் தசைகளில் நாயுருவி ஒட்டிகிடந்தது. உதடுகளை ஈரப்படுத்திக் கொண்டே ஒவ்வொன்றாக உருவி எடுத்தான்.

எஸ்தரை அப்படியே விட்டுவிட்டு ஓடி வந்ததை நினைக்க வெட்கமாயிருந்தது. நாளைக்கு எப்படி முகத்தில் முளிப்பது. பயந்தாங்கொள்ளியை காதலிக்க யாரு விரும்புவா. எஸ்தரிட்ட கேட்டுட்டு “ஓமெண்டு” சொன்னாளென்டால் டேவிட்டுக்கு மண்டேல போடனும் என வாய்விட்டு சொல்லிக்கொண்டான்.

டேவிட்டின் தலை தெரிகிறதா எனப் பார்த்துக் கொண்டு மெதுவாக மலையில் ஊர்ந்து ஏறினான். மொட்டைப்பாறையின் எதிர்ச்சரிவிலிருந்து டேவிட் மேலேறி வருவது தெரிந்தது. எஸ்தரின் முடியைக் கொத்தாகப் பிடித்திருந்தான். திமிறி ஓட முயன்றவளின் முகத்திலேயே அறைந்தான். அவள் கேசவா… கேசவா எனக் கத்துவது மொட்டைப்பாறையில் எதிரொலித்தது. டேவிட்டின் கையிலிருக்கும் அரிவாள் அவனது பயத்தைக் கூட்டியிருந்தது. இதயம் துடிப்பது வெளியில் கேட்டது.

மொட்டைப்பாறையில் இவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்து எதையோ காட்டி காட்டி எஸ்தரை அடித்தான். அவுசாரிப் பய… என்ற வார்த்தை மட்டும் எங்கும் எதிரொலித்தது. எஸ்தர் கீழே கிடந்து நெஞ்சிலும் முகத்திலும் அடித்துக் கொண்டே அழுதுகொண்டிருந்தாள். டேவிட் அவள் முடியைத் திருகி இழுத்து சரிவில் இறங்க முயன்றான். திடீரென எஸ்தர் டேவிடைத் தள்ளிவிட்டுவிட்டு மலையிலிருந்து குதித்தாள். அவளது உடல் லேசாகிப் பறந்தது. கால் மேலாகி தலை கீழ்வந்து உடல் உருண்டது. இனி எவனாலும் சித்திரவதை செய்ய முடியாதென்பதும் கேசவனோடு சேருவதை தடுக்க முடியாதென்பதும் அவளுக்கு மகிழ்ச்சியாயிருந்தது. இறக்க நினைத்து மலையிலிருந்து குதிக்க முடிவெடுத்த அந்த தருணத்தை யோசித்தாள்… ஆட்டுக்குட்டிகள் சிதறியோட அங்கொரு பாறை முளைத்திருந்தது.

எஸ்தர் … எஸ்தர் எனக் கத்தியபடி டேவிட்டை நோக்கி கேசவன் ஓடினான். டேவிட்  தடுமாறி எழுந்தான். எதுவும் நடக்காதது போல் அருகில் கிடந்த எஸ்தரின் தாவணியை எடுத்து அரிவாளைத் துடைத்துக் கொண்டே கீழிறங்கினான். வெறிபிடித்தவனைப் போல ஓடிவந்த கேசவன் மேலிருந்து எட்டிப் பார்த்தான்.

கீழே எஸ்தரின் உடல் குப்புறக் கிடந்தது. அதை நோக்கி டேவிட் மீசையைத் தடவியபடியே போய்க்கொண்டிருந்தான். இன்னும் நிறைய மீசைகள் வேட்டியைத் தொடைக்குமேல் கட்டிக்கொண்டு எஸ்தரை சுற்றி நின்றார்கள்.

கேசவன் மொட்டைப்பாறையை தள்ளி டேவிட் மீது விழுத்தப் பார்த்தான். அவனுக்கு டேவிட்டை இப்படிக் கொல்வது எளிதாயிருக்கும். ஆனால் பாறை அசையவேயில்லை. நெம்பித்தள்ள எதையாவது எடுக்கலாமென சுற்றிப் பார்த்தான்…

அங்கே  அவனுடைய வெட்டப்பட்ட கழுத்து தனியாகக் கிடக்க இரத்தம் ஒரு பெருங்கோடாக சரிவில் இறங்கிக் காய்ந்திருந்தது. அலறிக்கொண்டே கேசவன் தலைதெறிக்க ஓடினான்.

மொட்டைப்பாறை உருளத்தொடங்கியது

========xxxxxxxx=========

மன்னார் அமுதன்

பிரசுரமான இதழ்: தளவாசல் கலை இலக்கிய சமூக பண்பாட்டுக் காலாண்டிதழ் – யூலை செப்டெம்பர் 2016

Older Posts »

பிரிவுகள்