“நாம் அனைவரும் ஒரே குடும்பம்” எனும் தொணிப் பொருளில் இன, மத பேதங்களைக் கடந்து செயல்படும் கலை இலக்கிய அமைப்பான கொழும்பு திருமறைக் கலாமன்றம் ஆய கலைகள் 64இல் 32 கலைகளை தன்னகத்தே கொண்டு செயல்பட்டுவருகிறது.
கடந்த ஓராண்டு காலமாக நோன்மதி தின இலக்கிய நிகழ்ச்சிகளையும், கவியரங்குகளையும் சிறப்பாக நடத்தி வெற்றிகண்ட திருமறைக் கலாமன்றம், இனிவரும் காலங்களில் இலக்கிய நிகழ்ச்சிகளை “இலக்கியப் பாசறை” எனும் தலைப்பின் கீழ் நடாத்தத் திட்டமிட்டுள்ளது.
கடந்த ஓராண்டு காலத்தில் இலங்கை கவிஞர்களுள் சிலரான மேமன் கவி, குறிஞ்சி இளந்தென்றல் கனிவுமதி, வரிதி.சி.இரவீந்திரன், நிந்தவூர் ஷிப்லி, மட்டுவில் ஞானக்குமரன், மன்னார் அமுதன், நாச்சியாதீவு பர்வீன், றிம்ஷா முகமட், தியத்தலாவ றிஷ்னா, கிண்ணியா அமீர் அலி… சதீஸ், எம்.ஐ.லோஷன் (இன்னும் பலர்) சிறுகதை எழுத்தாளர்களான டொமினிக் ஜீவா, மாத்தளை சேனாதிராஜா, ஞானம் ஞானசேகரன், அந்தனி ஜீவா, நினைவழியா நாட்கள் பரண் தம்பதிகள் (..இன்னும் பலர்) போன்றோரும் பேச்சாளர்களான என்.அசோக்பரன், பிரவீன் தங்கமயில், சட்டத்தரணி இரா.சடகோபன், பொன்.சக்திவேல்(அமரர்), … (இன்னும் பலர் ), எம்மோடு இணைந்து தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கும், இலக்கியப் பாசறையின் வளர்ச்சிக்கும் உதவினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் மூத்த ஊடகவியலாளரான மா.பா.சி, மற்றும் ஏ.எஸ்.எம்.நவாஸ் போன்றவர்கள் இலக்கியப் பாசறையின் நிகழ்வுகளை பொது மக்களுக்குத் தெரிவிக்கும் நற்பணியை ஊடகம் மூலமாக ஆற்றி வருகின்றனர். எமது நிகழ்வுகளை வெளியிட்டு வரும் தேசிய ஊடகங்கள் அனைத்திற்கும் எமது நன்றிகள்.
திருமறைக் கலாமன்றத்தின், இலக்கிய பாசறையின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களில் குறிப்பிட்டுக் கூறப்படக் கூடியவர்களுள் தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயலாளர் சட்டத்தரணி சோ. தேவராஜாவும், உதவி சுங்கத்துறை அதிகாரியான எஸ். சக்திதரனும் முக்கியமானவர்கள் ஆவர். இவர்கள் பல நிகழ்வுகளில் எமது நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கியும், கலந்து கொண்டும், கட்டுரை விமர்சனங்களைச் செய்தும் சிறப்பித்துள்ளார்.
இவ்வாறு கடந்த காலங்களில் எம்மோடு பலவழிகளிலும் உதவி செய்து தமிழிலக்கிய வளர்ச்சியிலும் இலக்கியப் பாசறையின் வளர்ச்சியிலும் பங்கு பற்றியவர்களை நாம் இந்த ஓராண்டு நிறைவு நேரத்தில் நன்றியுடன் நினைவு கூருகிறோம். இவ்வளர்ச்சியில் எமது மன்றத் தோழர்களின் ஒத்துழைப்பும், உடலுளைப்பும், நிதியுதவிகளும் எண்ணிலடங்காதவை. அவர்களுக்கு நன்றி என்ற ஓர் வார்த்தையைக் கூறி நாம் ஒதுங்கிக் கொள்ளமாட்டோம்.
மேலும்
இன்றுமுதல் எம்மொழியில் பற்றுடனே இருப்போம்-அதை
இழிந்ததென்று சொல்லும்நாவை இழுத்துவைத்து அறுப்போம்!
உயிரைகேட்டு நின்றால்கூட உடனேநாங்கள் கொடுப்போம்-ஆனால்
உயிர்தமிழை அழிக்கவரின் தலையைநாங்கள் எடுப்போம்
– நன்றி: கவிஞர் அஸ்மின்
தமிழ்க்கொரு சிறப்பு முப்பால் – கற்றால்
தளரவே மாட்டாய் மூப்பால் – சிறிதாய்
நாளும் குடிப்பாய் தமிழ்ப்பால் – நாளை
நீயும் சுரப்பாய் கவிப்பால் –நன்றி. ம.அ
எனும் அழகு தமிழ்க் கவிதைகள், கட்டுரைகள், விமர்சனங்கள் மேல் தீரா மோகமும், தமிழ் மொழி மேல் தீராக் காதலும் உள்ள இலக்கிய அன்பர்களை எம்மோடு இலக்கிய பாசறையின் வளர்ச்சிப் பணியில் ஈடுபட வருமாறு அன்புடன் அழைக்கிறோம்.
இலக்கிய வளர்ச்சிப் பணி என்பது உடலை வருத்துவதோ, பணத்தை விரயமாக்குவதோ அல்ல. இலக்கிய ஆர்வலர்கள் சிறிது நேரத்தை செலவிட்டு எம் பாசறை இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கு பற்றுவதே ஆகும். நோன்மதி தினங்களில் நடைபெறும் இலக்கிய நிகழ்வுகளிலும், பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற சிறப்பு தினங்களில் நடைபெறும் கவியரங்கம், பட்டிமன்றம், விவாதம், கருத்தாடல் போன்றவற்றில் பங்குபற்றுவதன் மூலமாகவும், பார்வையாளராகக் கலந்து கொள்வதன் மூலமும் நீங்கள் இலக்கியப் பணியாற்றலாம்.
இலக்கியத்தை நீங்கள் வளர்க்க நினைக்கும் நிமிடத்திலேயா, இலக்கியம் உங்களை வளர்க்கத் தொடங்கிவிடும். இது இலக்கிய ஆர்வலர்களுக்கும், மொழிக்குமிடையேயான எழுதா ஒப்பந்தம்.
நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்!
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்!
அதுவும் அற்றவர் வாய்ச்சொல் அருளீர்!
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்!
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர்!
எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்
இப் பெருந் தொழில் நாட்டுவம் நாரீர்!
– நன்றி.பாரதியார் (வெள்ளைத் தாமரை)
எனும் பாரதி வாக்கிக்கேற்ப எதாவது ஒரு வழியில் உங்களால் இலக்கியப் பாசறைக்கு உதவ முடியுமென நினைத்தால் நீங்கள் நிச்சயமாக எம்முடன் இணந்து கொள்ளலாம்.
நன்றிகள்
திருமறைக் கலாமன்றம் – (நாம் அனைவரும் ஒரே குடும்பம்)
இலக்கியப் பாசறை
#176, புதுச்செட்டித்தெரு,
கொழும்பு – 13.

























