மன்னார் அமுதன் எழுதியவை | பிப்ரவரி28, 2013

நல்லுமரமும் ராசாதிண்ணையும்


பாட்டையா ஒரு
விதை விதைத்தார்
மந்தையில்

ஆலவிதையாயினும்
நல்லு மரமாய் வளர்ந்தது
பாட்டையாவின் பெயரோடு

ஊரார் ஓய்வெடுக்கவும்
ஒன்றுகூடவும்
உதவியது நல்லுமரம்

விழுதுதுகள் எழுகையில்
வயோதிபர்களின்
வேடந்தாங்கலாகியிருந்தது
அப்பா அதைச் சுற்றி
திண்ணை கட்டினார்

ஆடுபுலி ஆட
ஏதுவாயிருந்தது
ராசாதிண்ணை

ஆல் வேரற்றிருக்கையில்
நாகரிகம் அறிந்திருந்தேன்
நல்லுமரத்தை
விழுதுகள் தாங்கிக்கொண்டன

பாட்டையாயும் அப்பாவும்
பாரமாயிப் போயினர்
எனக்கு

இப்போதெல்லாம்
வெறிச்சோடிக்கிடக்கிறது
நல்லுமரமும் ராசாதிண்ணையும்
                                                       –மன்னார் அமுதன்

 

 

 


மறுவினைகள்

  1. சிறந்த பாவரிகள்
    தொடருங்கள்


பின்னூட்டமொன்றை இடுக

பிரிவுகள்