அமுதன்

முகப்பிற்குத் திரும்ப இங்கே சொடுக்கவும்:
——————————————
——————————————

என்னைப் பற்றி இவர்கள் கூறியவை:

அருட்திரு. தமிழ் நேசன் அடிகள் நவின்றது:

அமுதனின் கவிதைளில் அவரின் பெயரைப் போலவே “அமுதம்” நிறைந்திருப்பதைச் சுவைக்க முடிந்தது. அமுதன் தன் உணர்வுகளுக்கு எழுத்துக்களால் உருக்கொடுத்து வாசகர் உள்ளங்களில் உலாவவிட்டுள்ளார்.
அமுதனின் உள்ளத்து உணர்வு கவிதையாக இந்நூலில் உருவெடுத்துள்ளது. அவருடைய ஒரு கவிதையே அதைக் காட்டுன்றது.

“பலருக்குத் தொண்டைக் குழிக்குள்
அடைத்துக் கொண்டவை தான்
எனக்கோ விரல்களின் வழியே
வீழ்கின்றன

இவைகளை
எழுதாத இரவுகள்
இனப்படு கொலைகளைப் போலவே
முடிவின்றி நீள்கின்றன”

நட்பின் நிழலில்
நிறைந்த வாழ்த்துக்களுடன்
அருட்திரு. தமிழ் நேசன் அடிகள்
ஆசிரியர் ”மன்னா”

—————————————-
—————————————-

கலாபூஷணம் கலைவாதி கலீல் நவின்றது:

“சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொற்புதிது, சோதிமிக்க நவ கவிதை, எந்நாளும் அழியாத மாகவிதை” என்றான் பாரதி. அதனைப் பின்பற்றியே கவிதை இலக்கியம் படைத்து வருகிறார், இளங்கவிஞரான மன்னார் அமுதன்.

அவரது கவிதைகளை நான் படித்துப் பார்த்தேன். சொல் புதிது, சுவை புதிதாக இருப்பதை உணர்கிறேன். இவர் மரபுக் கவிதைகளைத் தவிர்ந்து புதுக்கவிதைகளையே எழுதியிருக்கிறார். இவரது கவிதைகளில் மனிதநேயம், காதல், கழிவிரக்கம், விரக்தி, வேதனை, பந்தபாசம், ஏமாற்றம், எதிர்பார்ப்புகள், கொடுமைகளுக்கு எதிராக கிளர்ந்தெழும் பாங்கு, போராடும் குணம், இன்னோரன்ன உணர்ச்சி பிரவாகங்கள் இழையோடுவதை அவதானிக்க முடிகிறது.

யாப்பிலக்கணத்தை மீறி மரபை உடைத்து இவர் எழுதியிருந்தாலும், இவரது கவிதைகளில் வெறும் வசனப் பாங்கு காணப்படவில்லை என்பது விசேட அம்சமாகும். பெரும்பாலான புதுக்கவிஞர்களின் கவிதைகளில் காணமுடியாத ஓசைநயம், ஓசைச்சுவை இவரது கவிதைகளில் இழையோடுவதையும் அவதானிக்க முடிகிறது.

ஒரு கவிஞனுக்கு ஆகாயத்திற்கு அப்பாலும் ஊடுருவிப் பாய்கின்ற தீட்சண்யப்பார்வை இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அமுதனின் கவிதையைப் படித்துப் பார்த்த போது தீட்சனப்பார்வை இவரிடம் இருப்பதை என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

“விளக்கோடு எரிந்து வீழ
விட்டிலல்ல நாங்கள்
விழுந்த இடம் பொசுக்கிவிடும்
விடிவெள்ளி தமிழனென்று – சொல்லடி சிவசக்தி…

விதைத்த இனம் முளைத்து வரும்
மீண்டும் உனை சிதைத் தழிக்கும்
சாம்பலாக வீழ்ந்தாலும்
பீனிக்சாய் எழுவோமென்று – சொல்லடி சிவசக்தி…”

போன்ற கவிதைகள் மூலம் கவிஞரது உளப்பாங்கையும், உணர்ச்சி வேகத்தையும், கவிதா வீச்சையும், வீரத்தையும் புரிந்து கொள்ள முடிகிறது.

கலாபூஷணம் கலைவாதி கலீல்
முன்னாள் உபபீடாதிபதி
உதவி ஆசிரியர் – நவமணி.

———————————————
———————————————

எனது முதலாவது கவிதை நூல்: “விட்டு விடுதலை காண்”
கிடைக்குமிடங்கள்:
பூபாலசிங்கம் புத்தக சாலை,
பிட்ரபேன் புத்தகசாலை,
ஜெயா புத்தக சாலை

——————————————–
——————————————–

முகப்பிற்குத் திரும்ப இங்கே சொடுக்கவும்:

மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்: