amuthan எழுதியவை | ஜூன்24, 2009

இலங்கையில் முதல்முறையாக இளம் படைப்பாளிகளின் பயிற்சிக்கான ஒருநாள் ஒன்றுகூடல்

– அழைக்கிறார் “மல்லிகை” ஜீவா

44வருடங்களைக் கடந்து 50வது ஆண்டை நோக்கி… எனும் உத்வேகத்தோடு வெற்றிநடை போடும் இலங்கை இலக்கிய உலகில் தரம் வாய்ந்த இலக்கிய சஞ்சிகைகளுள் ஒன்றான “மல்லிகை”யின் ஆசிரியரும், மூத்த படைப்பாளிகளில் ஒருவருமான திரு.டொமினிக் ஜீவா இளம் படைப்பாளிகளுக்கான ஒரு முழுநாள் ஒன்று கூடலை கொழும்பில் நடாத்தத் திட்டமிட்டுள்ளார். “இலக்கியத் துறையில் உண்மையான, தீவிர ஆர்வமுள்ள படைப்பாளிகள் எவரும் விண்ணப்பிக்கலாம். படைப்பாளிகளின் எண்ணிக்கையையும் ஆர்வத்தையும் பொறுத்து நாள், மற்றும் பயிற்சி நடாத்துவதற்கான இடம் தீர்மானிக்கப் படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜூன் மாத மல்லிகையில் அவர் தெரிவித்திருப்பதாவது;

“இளந் தலைமுறைப் படைப்பாளிகளின் இலக்கிய சிருஷ்டிகளைப் பத்தடி, பன்னிரண்டடி அறைக்குள் இருந்து கொண்டு தீர்மானிக்காமல், அவர்களுடன் முகம் பார்த்து நேரடியாகவே பரஸ்பரம் விவாதிக்க விரும்புகின்றோம்.

மல்லிகைக்கு இந்தப் பொறுப்பு நிறைய, நிறைய உண்டு. காரணம் நாளை ஒரு புதிய தலைமுறையை உருவாக்க வேண்டிய தேசிய இலக்கிய கடமைப்பாடுகளும் நம் முன்னால் முகம் காட்டி நிற்கின்றன.

நாடு முழுவதும் நாம் இந்தச் சோதனை முயற்சியைக் கொண்டு செல்ல முடியாது. அதற்கான சூழ்நிலையும் இன்று இல்லை. அகலக் கால் பதிக்கவும் நாம் விரும்பவில்லை.

எனவே கொழும்பு மாவட்டத்தை உள்ளடக்கிய பகுதியில் இந்த ஒருநாள் விழாவை ஒழுங்கு செய்ய விரும்புகின்றோம். காலை 9.30இல் இருந்து 5.30 மணிவரை இது நடைபெறும்.

நமது படைப்பாற்றலின் குறை நிறைகளை நாமே நேரில் விமர்சன பூர்வமாகக் கண்டடைவதற்கு விரும்பும் உண்மையான இளம் படைப்பாளிகள், மல்லிகையுடன் தொடர்பு கொள்ளலாம். பெயர், விலாசம் ஆகியவற்றைத் தெளிவாக எழுதி அனுப்புங்கள். உங்களது ஆரோக்கியமான இலக்கியப் பங்களிப்பின் வேகத்தைப் புரிந்து கொண்டு, அடுத்த கட்டத்தைத் தீர்மானிப்போம்.” என்று கூறியுள்ளார்.

இக்கலந்துரையாடலானது படைப்புகளை மேம்படுத்தவும், படைப்பாளிகளின் கருத்துப்பகிர்விற்கும், இளம் படைப்பாளிகளின் அறிமுகத்திற்கும், தலைமுறை எழுத்தாளர்களுக்கிடையேயான இடைவெளியை நிரப்பும் வகையிலும் அமையும் என்பதில் ஐயமில்லை. மேலும் பரந்து நிற்கும் நமது இலங்கை வலைப்பதிவாளர்கள், இந்த ஒன்று கூடலைத் தளமாகக் கொண்டு, இனிவரும் சந்திப்புக்களைத் திட்டமிடுவதற்கும், ஒழுங்கு செய்யவும் வழிசமைக்கும் என்பது வலைப்பதிவாளன் என்ற வகையில் என் தனிப்பட்ட கருத்து.

workshopஏனெனில் 2003ஆம் ஆண்டில் ஒரு பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அது தொடர்பான சில வார்த்தைகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். “ புலம் பெயர்ந்த படைப்பாளிகளுக்கான பயிற்சிப் பட்டறை”யை 2003 -ல் ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகம் எனும் தொண்டு நிறுவனம் திருநெல்வேலியில் (புலித்தேவன் நகர் / தமிழ்நாடு ) ஏற்பாடு செய்திருந்தது. அப்பயிற்சிப் பட்டறையில் 40க்கும் மேற்பட்ட நம் படைப்பாளிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த படைப்பாளிகளான ச. தமிழ்ச்செல்வன் (பத்தமடை), கிருஷி (நெல்லை 1), உதய சங்கர் (கோவில்பட்டி 1) போன்றவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடும் சந்தர்ப்பத்தை ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழக நெல்லை மண்டலப் பொறுப்பாளர் மகேஸ்வரன் ஏற்பாடு செய்து தந்திருந்தார். அப்பட்டறை எம் எழுத்துக்களை செம்மைப் படுத்தியது. அந்நாள் வரை ஈழ சுதந்திரன், மாணவர் விடியல் மற்றும் பல ஜனரஞ்சக இதழ்களில் எழுதி வந்த சக இலங்கை, இளம் படைப்பாளிகளின் பெயரை மட்டுமே அறிந்திருந்த நான், அவர்களனைவரையும் ஒரே சந்தர்ப்பத்தில் காணும் போதும், கதைக்கும் போதும் உணர்ந்த மகிழ்சிக்கு அளவில்லையென்றே கூறலாம்.

உங்களையும் மல்லிகை ஒழுங்கு செய்துள்ள இவ்வொன்று கூடலில் சந்திக்க நேர்ந்தால், அதுபோன்ற மகிழ்சியை மீண்டும் பெறுவேன்.

எனவே ஆர்வமுள்ள படைப்பாளிகள் கீழ்வரும் முகவரியில் மல்லிகையுடன் தொடர்பு கொள்ளவும்:

மல்லிகை
# 201 / 4, Sri Kathiresan Street,
Colombo – 13.

தொலைபேசி : 0112320721

குறிப்பு:

நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இலக்கியத் துறைக்கு அர்ப்பணிப்புடன் பணி செய்து வரும் மல்லிகை ஆசிரியர் “டொமினிக் ஜீவா”வின் 83வது பிறந்த நாள் விழாவானது வரும் சனிக்கிழமை (27.06.2009) மாலை 5.00 மணியளவில் கலாசுரபி மண்டபத்தில் ,( # 176/1, புதுச்செட்டித்தெரு, கொழும்பு – 13 ) மல்லிகையின் நலன் விருப்பிகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மல்லிகையை மனதார நேசிப்பவர்கள் இவ்விழாவில் கலந்து கொள்ளலாம். (மாலைகள், பொன்னாடைகள் தவிர்க்கப்பட்டுள்ளன.)


மறுவினைகள்

  1. இருவாரங்களுக்கு ஒரு முறை பூச்சரம் தரும் தலைப்பின் கீழ் எழுதப்படும் சிறந்த பூச்சரம் அங்கத்தவர் பதிவுக்கு பூச்சரம் வெள்ளி மலர் அந்தஸ்த்து வழங்கப்படும். எதிர்வரும் வெளிக்கிழமை (26.06.2009) தலைப்பும் விபரங்களும் பூச்சரத்தில்..

  2. தகவலுக்கு நன்றி அமுதன்

    —————————–

    அமுதன் நவின்றது:

    வருகைக்கும் பதிவிற்கும் நன்றி

  3. அரிய அருமையான ஒரு சேவை

    வாழ்த்துக்கள் !

    ——————————-

    அமுதன் நவின்றது:

    வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. தங்கள் சேவை நாட்டிற்குத் தேவை டயானா

  4. thankx.
    i called this number and ask about the place and time.My biggest concern is ,somebody shouldnt stand and talk for one or two hours pretending elders teaching or guiding youngsters :(

    —————————————

    அமுதன் நவின்றது:

    தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் முதற்கண் நன்றி சேரன். நாற்பது வருடத்திற்கும் மேலான படைப்புலக மற்றும் வெளியீட்டுத்துறை அனுபவம் கொண்ட 83 வயதுப் படைப்பாளி நிச்சயம் பெறுமதியான விசயங்களைப் பரிமாறிக்கொள்வார் என நம்புவோம்.

    பயிற்சிப் பட்டறைகள், வழிகாட்டல் வகுப்புகளே, எழுத்தைக் கற்பிக்கும் வகுப்பல்ல; கவிதையோ, கட்டுரையோ, சிறுகதையோ அவர்கள் கற்பிக்கும் முறைகளின் மூலம் வந்து விடாது என்பதை அவர்களும் அறிந்திருப்பார்கள். இது என் பணிவான கருத்து.

  5. இளம் படைப்பாளிகளின் பயிற்சிக்கான ஒருநாள் ஒன்றுகூடல் சிறப்புற வாழ்த்துக்கள். தகவலை வெளியிட்தற்கு நன்றி.

    ——————————

    அமுதன் நவின்றது:

    தங்கள் வருகைக்கும், பதிவிற்கும் நன்றி ஐயா. தங்கள் வலைப்பூவைத் தொடர்ந்து வாசித்துப் பயன் பெறும் வாசகன் நான் என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.

  6. “மல்லிகை” யும் டொமினிக் ஜீவா அவர்களும் என் நினைவுகளோடு மிகவும் நெருங்கியவர்கள்! மறக்க முடியாத அந்த நாட்கள் ….இன்னமும் என்னோடு…!
    83 வயதிலும் அதே இளமை உணர்வோடு பணியாற்றும் அவரின் சேவைக்கும் “மல்லிகை”க்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்!

    ————————————————-

    அமுதன் நவின்றது:

    வருகைக்கும் பதிவிற்கும் நன்றி. தங்கள் தமிழ்ப்பணி சிறக்க வாழ்த்துக்கள்


மறுமொழி அளிக்கவும்

உங்கள் பதில்:

வகைகள்